

கேரள மாநிலத்தில் உயிர்கொல்லி நோயான நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கும் நோய் பரவலாம் என கருதுவதால் தமிழகம் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள வெட்டக்காடு என்ற இடத்தில் கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த 55 வயது தொழிலாளி கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சொந்த ஊர் திரும்பிய அவர் கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் புதுவை ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.
அதன் பரிசோதனை அறிக்கை இப்போது ஜிப்மருக்கு வந்துள்ளது. அதில் அந்த நோயாளிக்கு நிபா வைரஸ் தாக்குதல் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனவே அவரை வேறு வகையான காய்ச்சல் தாக்கி இருப்பதாக கருதப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.