

நிதி நிறுத்தம்
பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி வழங்கி வந்த USAID அமைப்புக்கான நிதியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுத்துவதாக அறிவித்திருந்தார்.
அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை (DODGE) என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு தலைவராக உலக பணக்காரர் எலான் மஸ்க்கை நியமித்தார். இந்த துறை அரசின் வீண் செலவுகளை கண்டறிந்து அதை குறைப்பதற்கான ஆலோசனையை டிரம்ப்புக்கு வழங்கி வருகிறது.
இதற்கிடையில் USAID மூலம் இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுதுவதாக DODGE அறிவித்தது. இந்த நிதியுதவி ஒப்பந்தம் 2012 இல் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் கவனம் பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்கா வழங்கி வந்த இந்த நிதி, இந்திய தேர்தலில் அந்நிய நாட்டின் தலையீட்டை உறுதி செய்வதாக பாஜக கூறியுள்ளது.
பாஜக வாதம்
இதுதொடர்பாக பாஜக தலைவர் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் பதிவில், "2012 ஆம் ஆண்டில், எஸ்.ஒய். குரைஷியின் தலைமையில், தேர்தல் ஆணையம், ஜார்ஜ் சோரோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது USAID ஆல் நிதியளிக்கப்படுகிறது. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிதியை பாஜக பெறவில்லை. அப்படியென்றால் அமெரிக்காவின் நிதியுதவியைப் பெற்றது யார்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
குரேஷி மறுப்பு
ஆனால் 2010-2012 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய்.குரேஷி, இந்த கூற்று ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் நிதி பெறும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்ல" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பயிற்சி மற்றும் வள மையமான IIIDEM மூலம் பிற நாடுகளுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தோம். ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதியுதவி அல்லது நிதி அளிப்பதாக வாக்குறுதி என எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
பவன் கேரா பாயிண்ட்
இந்நிலையில் பாஜவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தேசிய செய்திதொடர்பாளர் பவன் கேரா பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
2012 ஆம் ஆண்டு, USAID இலிருந்து தேர்தல் ஆணையம் இந்த நிதியைப் பெற்றதாகக் கூறப்பட்டபோது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் என்று இந்த கோமாளியிடம் (பாஜக தலைவர் அமித் மாலவியாவிடம்) யாராவது சொல்லுங்கள்.
அமித் மாலவியா சொல்லும் கூற்றுப்படி, ஆளும் கட்சி (காங்கிரஸ்) இந்த 'வெளிநாட்டு தலையீடு' என்று அழைக்கப்படுவதைப் பயன்படுத்தி அதன் சொந்த தேர்தல் வாய்ப்புகளை நாசப்படுத்தியது என்று பொருள்படுகிறது. மேலும் எதிர்க்கட்சி (பாஜக) 2014 தேர்தல்களில் சோரோஸ்/USAID காரணமாக வெற்றி பெற்றது என்றும் அர்த்தமாகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Someone tell this clown that in 2012, when ECI allegedly got this funding from USAID, the ruling party was Congress. So, by his logic :▪️Ruling party (Congress) was sabotaging its own electoral prospects by getting this so called 'external interference'. ▪️And that the… pic.twitter.com/Xa92irSf29