

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் சிரமத்தை போக்க தேவஸ்தானம் சார்பில் நிவாசம், ஸ்ரீனிவாசன், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 3 இடங்களில் நேர ஒதுக்கீடு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு 8 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இன்று நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் வாங்குவது நிறுத்தப்பட்டது. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு 2 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
நேற்று முன்தினம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இன்று பிற்பகல் முதல் இரவு 10 மணி வரை தரிசனம் செய்வார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை தரிசன டிக்கெட் வழக்கம் போல் வழங்கப்பட உள்ளது.
திருப்பதியில் நேற்று 75,485 பேர் தரிசனம் செய்தனர். 30,939 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.36 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 3.70 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.