இரு சமூகத்தினர் மோதல்.. மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

மெய்டேய் சமூகத்தினரை எஸ்டி பிரிவில் சேர்த்தால் மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியும்.ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரு சமூகத்தினர் மோதல்.. மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு
Published on

கவுகாத்தி:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டேய் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 3ம் தேதியன்று குக்கி பழங்குடியின அமைப்பு சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டேய் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை பல்வேறு இடங்களுக்கும் பரவி 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறையைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், தலைநகர் இம்பாலின் நியூ செக்கான் பகுதியில் மெய்டேய் மற்றும் குக்கி சமூகத்தினரிடையே இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. உள்ளூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இடம்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இந்த மோதல் உருவானது. மோதல் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயம் இருந்ததால், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநில மக்கள்தொகையில் மெய்டேய் சமூகத்தினர் 64 சதவீதம் உள்ளனர். எனினும், மலைப் பகுதிகளில் பழங்குடியினர் அல்லாதவர்கள் நிலம் வாங்க அனுமதிக்கப்படாததால், மாநிலத்தின் 10 சதவீத நிலப்பகுதியிலேயே அவர்கள் வசிக்கின்றனர். அவர்களை எஸ்டி பிரிவில் சேர்த்தால் மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியும். எனவே, அவர்களின் இந்த கோரிக்கை பழங்குடியினரை ஆத்திரமடைய செய்துள்ளது.

பாஜக அரசாங்கம் தங்களை காடுகளிலிருந்தும் மலைகளில் உள்ள வீடுகளிலிருந்தும் அகற்றுவதை நோக்கமாக கொண்டு திட்டமிட்டு செயல்படுவதாக குக்கி சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். போதைப்பொருளுக்கு எதிரான போர் என்று கூறுவதும் தங்களை வெளியேற்றுவதற்கான ஒரு சூழ்ச்சி என்றும் கூறுகின்றனர்.

இரு சமூகங்களிடையே மோதல் உருவானதில் இருந்து ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும் இரு சமூகத்தினரையும் சந்தித்து பேசி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com