வருமானவரி சோதனை: காங்கிரஸ் எம்.பி.யிடம் சிக்கிய தொகை ரூ.353 கோடி- ஏறக்குறைய எண்ணும் பணி முடிந்தது

வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது.50 அதிகாரிகள், 40 மெஷின் மூலம் பணம் எண்ணப்பட்டன.
வருமானவரி சோதனை: காங்கிரஸ் எம்.பி.யிடம் சிக்கிய தொகை ரூ.353 கோடி- ஏறக்குறைய எண்ணும் பணி முடிந்தது
Published on

ஒடிசாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹூ குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.

ஒடிசாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், ரூர்கேலா கந்தர்கர் மற்றும் மேற்கு வங்காளம், ஜார்க்கண்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட மதுபான நிறுவனத்துடன் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேல்சபை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு தொடர்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த புதன்கிழமை சோதனை தொடங்கியதில் நாள்தோறும் நடத்தப்பட்ட சோதனையில் பணக்குவியல்கள் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற சோதனையில் வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 225 கோடி பணம் போலங்கிரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது. அதை தொடர்ந்து நாளுக்கு நாள் பணத்தின் எண்ணிக்கை உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நேற்று முன்தினம் வரை ரூ.290 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டில் வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மிக அதிக தொகை இதுவாகும்.

நேற்று நடத்தப்பட்ட 5-வது நாள் சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 3 வங்கிகள், 50 அதிகாரிகள், 40 மெசின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டது.

நேற்று நள்ளிரவிலும் பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒடிசாவில் இந்த பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் ரூ. 353.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com