

குடவாசல்:
குடவாசல் பஸ்நிலையத்தில் டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அமைச்சர் காமராஜ் நிலவேம்பு குடிநீரை வழங்கி பேசும்போது கூறியதாவது:-
குடவாசல் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூடும் இடங்கள் தூய்மையாக இருக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு வியாழக்கிழமையும் தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு தினம் மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 22 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் குடவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்த்து சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மருத்துவ மனையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார். அப்போது கலெக்டர் நிர்மல்ராஜ் மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், தாசில்தார் சண்முக வடிவேலு, திருவீழிமிழலை சுகாதார அலுவலர் ஜெகதீஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாப்பா.சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜேந்திரன், வீட்டுவசதி சங்க தலைவர் சாமிநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.