

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று அவர் பிரசாரம் செய்தார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்து பேசினார்.
இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை போன்றவற்றை கூட செய்து தரவில்லை. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கூட சாக்கடை வசதிகள் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் தற்போது எந்த வசதியும் செய்யப்படாத நிலை உள்ளது. ஆட்சியில் இருந்தவர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தேர்தல் செலவு என்பது நமது வியர்வையும் ரத்தமும்தான். அதில் எனது ரத்தமும் கலந்து இருக்கும். பிரதமர் நமது லட்சியம் அல்ல. தமிழகமே நமது லட்சியம். என் இலக்கு, குறி தமிழகம்தான்.
பல ஆண்டுகளாக தமிழகத்தின் குரல் தலை நகரில் ஒலிக்கவில்லை. அந்தக்குரல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. தமிழனின் குரல் தலைநகரில் கேட்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து ஏற்கனவே சென்றவர்கள் ஜால்ராக்களாக செயல்பட்டு உள்ளனர். எனவே தான் ஜாதி மதம் பார்க்காமல் நேர்மையான படித்த இளைஞர்களை தேர்வு செய்து உங்கள் முன் நிறுத்தியுள்ளோம். அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு பணி செய்யாவிட்டால் உடனடியாக ராஜினாமா செய்வோம் என உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து எங்கள் வேட்பாளர் பாவை விளக்கு போல் நிற்கமாட்டார். அவரும் பேசுவார் எனக் கூறி வேட்பாளரிடம் பேச அறிவுறுத்தினார். #LokSabhaElections2019 #KamalHaasan