காபூல் தாக்குதல்கள் உணர்த்தும் பாடம் என்ன? -ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல்

மனித உயிர்களை ஈவு இரக்கமின்றி பலி வாங்கிய காபூல் தாக்குதல்களை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததால், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றுகின்றன. நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் ஏராளமானோர் சிக்கினர். இந்த தாக்குதல்களில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மதிய நிலவரப்படி 103 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் 90 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் ஆவார்கள். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

இவ்வாறு மனித உயிர்களை ஈவு இரக்கமின்றி பலி வாங்கிய தாக்குதல்களை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர்  டி.எஸ்.திருமூர்த்தி பேசும்போது, காபூல் வெடிகுண்டு தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு புகலிடங்களை வழங்குவோருக்கு எதிராகவும் உலக நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதை இந்த தாக்குதல்கள் வலியுறுத்துகின்றன. பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றும் திருமூர்த்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com