கேரள முதல்-மந்திரியிடம் சூரியஒளி தகடு ஊழல் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல்

கேரளாவில் முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின்போது, சூரியஒளி தகடுகள் வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது குறித்த விசாரணை அறிக்கையை நீதிபதி சிவராஜன் முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் அளித்தார்.
கேரள முதல்-மந்திரியிடம் சூரியஒளி தகடு ஊழல் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின்போது, சூரியஒளி தகடுகள் வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் அப்போதைய முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க 2013-ம் ஆண்டு கேரள அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. இந்த கமிஷன் முன்பாக உம்மன் சாண்டி பல்வேறு நாட்களில் மொத்தம் 53 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார். இதனால் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சிவராஜன் நேற்று கமிஷனின் அறிக்கையை முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் அளித்தார்.

இதுபற்றி நீதிபதி சிவராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “முதல்-மந்திரியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து, விசாரணையின் அறிக்கையை நான்கு தொகுதிகளாக கொடுத்திருக்கிறேன்” என்றார். அதேநேரம் அறிக்கையில் என்ன கூறப்பட்டு உள்ளது என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. 

X

Maalai Malar
www.maalaimalar.com