

அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர், அங்கு நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் வடமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அட்லூரு சாய்குமார் (23) இந்த விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் உள்ள இல்லியோனிஸ் மாநிலத்தில் உள்ள தேகல்ப் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.எஸ். படித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்குமார் அவரது நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனது காருக்கு திரும்பிய போது, விபத்தில் சிக்கியுள்ளார். இதில் வேகமாக வந்த மற்றொரு கார் சாய்குமாரின் கார் மீது கடுமையாக மோதியதில், சாய் சம்பவ இடத்திலேயே பலியானதாக, செய்தியாளர்களை சந்தித்த சாயின் பெற்றோர் சந்திரசேகர் ராஜு - சுகாஷினி தம்பதி தகவல் தெரிவித்தனர். அவர்களது இரு மகன்களில் இளைய மகனான சாய்குமார், படிப்பை இன்னும் 3 மாதங்களில் முடிக்க இருந்த நிலையில் உயிரிழந்ததாக வந்த செய்தி அவர்களது குடும்பத்தையே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.