வாணரப்பேட்டையில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேருக்கு வலைவீச்சு

வாணரப்பேட்டையில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலை மிரட்டல்
கொலை மிரட்டல்
Published on

புதுச்சேரி:

புதுவை வாணரப்பேட்டை தமிழ்தாய் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது49). வெல்டிங் கடை நடத்தி வருகிறார்.   இவர் வீட்டின் 2-வது மாடியிலும் இவரது தம்பிகளான தசரதன் மற்றும் ராஜீ ஆகியோர் கீழ்தளத்தில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வீட்டின் மாடிக்கு செல்லும் வழியில் தசரதன், ராஜீ ஆகியோர் பழைய மரச்சாமான்கள், செங்கற்கள் மற்றும் இரும்பு பொருட்களை குவித்து வைத்திருந்தனர்.

இதனால் வீட்டுக்கு செல்ல இடையூராக இருந்ததால் சம்பவத்தன்று ரவி இந்த பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தசரதனும், ராஜீயும் எதிர்ப்பு தெரிவித்து ரவியிடம் தகராறு  செய்தனர்.  

இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த தசரதனும், ராஜீயும் சேர்ந்து  மரக்கட்டையால் ரவியை தாக்கினர். மேலும் கத்தியால் வெட்டினார்கள். அதோடு இதனை தடுக்க முயன்ற ரவியின் மனைவி கோமதி மற்றும் மகள் தனுஸ்ரீ ஆகியோரையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த  ரவி உள்பட 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். 

பின்னர் இதுகுறித்து ரவி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி  சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்குபதிவு செய்து தசரதன் மற்றும் ராஜீ ஆகிய 2 பேரையும்  தேடிவருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com