இன்ஸ்பெக்டரால் துன்புறுத்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு- மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு உத்தரவு

இன்ஸ்பெக்டரால் அடித்து துன்புறுத்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்ஸ்பெக்டரால் துன்புறுத்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு- மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு உத்தரவு
Published on

சென்னை:

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டி.லட்சுமணன், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ந்தேதி இரவு சுமார் 10.15 மணிக்கு குடும்பத்துடன் காரில் கொடுங்கையூர் அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் குடிபோதையில் காருக்கு முன்பு வந்து விழுந்தார். நான் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தி, சாலையில் பாதுகாப்பாக, ஓரமாக செல்லும்படி அவருக்கு அறிவுரை கூறினேன்.

அவர் என் காரை கையால் அடித்து வெளியில் வரும்படி கூறினார். நான் காரைவிட்டு இறங்கியதும் என்னை கண் மூடித்தனமாக தாக்கினார். பின்னர், போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து போலீசாரை வரவழைத்தார்.

அவர்கள் என்னை கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்தும் என்னை அடித்து உதைத்தபோது தான், குடிபோதையில் காருக்கு முன்னால் விழுந்தவர் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் என்று தெரியவந்தது. குடிபோதையில் இருந்த அவர், போலீஸ் சீருடை அணியவில்லை.

இதன்பின்னர் என்னுடைய மகன் போலீஸ் நிலையத்துக்கு வந்து, வெற்று காகிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, என்னை அழைத்து சென்றான். என்னை அடித்து உதைத்த இன்ஸ்பெக்டர் சம்பத்தின் செயல் மனித உரிமைகளை மீறியதாகும். எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு இன்ஸ்பெக்டர் சம்பத் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அன்று இரவு சுமார் 10.15 மணிக்கு தான் ஓட்டப்பயிற்சியில் (ஜாக்கிங்) ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வேகமாக மனுதாரர் காரில் வந்து தன்மீது மோதினார் என்றும் இதில் உடலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும், எழும்பூர் கோர்ட்டில் என்மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்த மனுதாரர், மனித உரிமைகள் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்து தன்னை துன்புறுத்துவதாகவும் இன்ஸ்பெக்டர் கூறியிருந்தார்.

இந்த புகாரை விசாரித்த ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் லட்சுமணன் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் போலீசாரால் அடித்து உதைத்து, அவமானப்படுத்தி இருப்பது நிரூபிக் கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலீசாரின் செயலை ஏற்கமுடியாது. எனவே, புகார்தாரருக்கு ரூ.25 ஆயிரத்தை தமிழக அரசு இழப்பீடாக 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இந்த தொகையை இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் இருந்து அரசு வசூலித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com