

லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், நள்ளிரவு சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. அதேபோல், இன்று காலை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
அதேபோல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.