

இலங்கையில் நடந்த இனப் படுகொலையை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியை கடந்த மே 21-ந்தேதி நடத்த மே 17 இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தினால், மெரினா கடற்கரையில் எந்த ஒரு போராட்டத்துக்கும் போலீசார் அனுமதி வழங்காமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்தியதாக மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய நான்கு பேரை மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.