

ராயபுரம்:
சென்னை மண்ணடி இப்ராகிம் சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்து திருப்பதாக துறைமுகம் உதவி போலீஸ் கமிஷனர் ஆனந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து நேற்று மாலை ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் அந்த குடோனை சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.
அங்கு மூட்டை மூட்டையாக போதை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போதை பாக்கு தயாரிக்க பயன்படுத்தும் 80 மூட்டை மூலப் பொருட்களும் இருந்தன.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ. 20 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முத்தியால் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் மண்ணடியை சேர்ந்த சரத்குமார் (38), மான்கான் (42), சாரதாதாஸ் (40) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் போதைபாக்கு தயாரித்து விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் ஆவர். இவர்கள் வட சென்னை முழுவதும் வெற்றிலை பாக்கு மற்றும் பெட்டிக் கடைகளுக்கு போதை பாக்கு சப்ளை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.