

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நாளை வியாழக்கிழமை கடைசி நாளாகும்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 21 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் இன்று மனுதாக்கல் செய்தார்.
கடந்த 15-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் வேலூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கதிர்ஆனந்த் மீது தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அதற்கு பதில் பலம் வாய்ந்த மாற்று வேட்பாளர் வேட்புமனு செய்வது தொடர்பான ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.