காங்கிரஸ் முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு செப்டம்பர் 17 வரை காவல் நீட்டிப்பு - டெல்லி கோர்ட்

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரியான சிவக்குமாரின் விசாரணை காவலை செப்டம்பர் 17ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
Published on

புதுடெல்லி:

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.

இதையடுத்து,  கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியநிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி கைது செய்தனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விசாரணை காவல் முடிந்த நிலையில் சிவக்குமார் இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேலும் 5 நாள் காவலை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, அவரது விசாரணை காவலை செப்டம்பர் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com