search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி போலீஸ் நிலையம் எதிரே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவர்
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டி போலீஸ் நிலையம் எதிரே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவர்

    • தொழிலாளி தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்ததும் 2 பேரையும் கண்டித்துள்ளார்.
    • மனைவி கள்ளக்காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். ஆத்திரமடைந்த கணவர் 2 பேரையும் சரமாரியாக வெட்டியதில் கள்ளக்காதலன் உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபாவளி (வயது 40). கூலித் தொழிலாளியான இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா (27) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். சங்கீதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஈஸ்வரனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இதனால் தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்ததும் தீபாவளி 2 ேபரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்களது கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீபாவளி தனது மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

    இதனையடுத்து சங்கீதாவும், ஈஸ்வரனும் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் சங்கீதாவும், ஈஸ்வரனும் ஆண்டிபட்டி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த தீபாவளி அரிவாளால் அவர்கள் 2 பேரையும் மாறி மாறி வெட்டினார். ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு பயந்த சங்கீதா மற்றும் ஈஸ்வரன் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஈஸ்வரன் இறந்து விட்டார். சங்கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்காதலனை வெட்டிய தீபாவளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×