என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.18-க்கு விற்பனை
- மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
- விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஅள்ளி, எலங்காலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து பாலக்கோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இங்கு இருந்து வியாபாரிகள் தக்காளியை வாங்கி தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். பாலக்கோடு மார்க்கெட்டில் ரகத்திற்கு ஏற்ப தக்காளியை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர்.
இந்தநிலையில் பாலக்கோடு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 300 டன் அளவுக்கு தக்காளி விற்பனைக்காக வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.280- க்கும். சில்லரையாக ஒரு கிலோ ரூ.18-க்கும் விற்பனையாகிறது. தருமபுரி உழவர் சந்தையில் இன்று ரூ.18-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனையான தக்காளி தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளது, மேலும் பண்டிகை மற்றும் சுபமு கூர்த்த தினங்கள் இல்லாத தாலும் விலை சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.






