search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
    X

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் எடுத்து உரைத்த காட்சி.

    உடுமலையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

    • எண்ணும் எழுத்தும் திட்டமானது 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலை தாலுகாவில் திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், உடுமலை வட்டார வள மையம் ஆகியோரது ஒருங்கிணைப்பில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. 2022 -ம் கல்வி ஆண்டில் கொரோனா பேரிடரால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    செயல்பாடுகளின் மூலமாக பாட கருத்தினை கற்பித்து கற்றல் விளைவினை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி கையேடும், மாணவர்களுக்கு பயிற்சி நூல்களும் வழங்கப்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்ற கூட்டத் தொடரில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டமானது 2023-2024 -ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. உடுமலையில் நடைபெற்ற பயிற்சியை உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், ஆறுமுகம், மனோகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து ஆங்கிலம், தமிழ் பாடத்திற்கு நடைபெற்ற பயிற்சியை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் எடுத்து உரைத்தார். திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சுப்பிரமணியம் பயிற்சியைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

    இறுதியாக வட்டார வளமைய ஆசிரியர் ராம் பிரசாத் நன்றி கூறினார். வட்டார ஆசிரியர்கள் ஜனகம், ஜெயந்தி, ரேணுகாதேவி, புஷ்பம், சரஸ்வதி, செந்தில் நாயகி, கிருஷ்ணகுமார், சத்யராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×