சிறுபான்மையினா் கடன் உதவி பெற சிறப்பு முகாம்கள் வருகிற 1-ந் தேதி முதல் நடக்கிறது

18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 2022-2023 ம் நிதியாண்டில் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையின மக்களுக்கு கடன் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு 2022-2023 ம் நிதியாண்டிற்கு ரூ.1.55 கோடி அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர்பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் டாம்கோ விராசாட் (Virasat) கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடனுதவி சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000, நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000 இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்- திட்ட தொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் : திருப்பூா் வடக்கு வட்டத்தில் திருப்பூா் நகர கூட்டுறவு வங்கி, திருப்பூா் தெற்கு வட்டத்தில் கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் வருகிற1-ந் தேதியும், அவிநாசி வட்டத்தில் ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 2-ந் தேதியும், பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 5 ந் தேதியும் முகாம்கள் நடைபெறும்.

அதேபோல தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை வட்டத்தில் உடுமலை நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கணியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 6ந்தேதியும் முகாம் நடைபெறும். முகாம் காலை 10-30 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும்.

மேலும், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com – ஐ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com