

உடுமலை:
மாணவர்களின் கற்றல் குறைபாட்டை களைய இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் 279 பள்ளிகளுக்கு 353 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் வீடுகள் மட்டுமின்றி ஏதேனும் ஒரு பொது இடத்தை தேர்ந்தெடுக்கும் தன்னார்வலர்கள் குழந்தைகளுடன் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் உரையாடி கற்றலின் அவசியத்தை உணர்த்துகின்றனர்.
அங்கன்வாடி மையங்கள், சமுதாயக்கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அதேநேரம் இந்த மையங்களில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நோய்த்தொற்று பரவலை தவிர்க்க சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வட்டம் வரைய வேண்டும். சோப்பு, கிருமிநாசினி, தண்ணீர் வாயிலாக அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, தன்னார்வலர் தடுப்பூசி செலுத்தியிருப்பது, அனைவரும் முகக்கவசம் அணிவது போன்றவை உறுதி செய்யப்படுகிறது.
குறிப்பாக இம்மையங்களில் உள்ளாட்சி அமைப்பு வாயிலாக சுத்தம் செய்வது மட்டுமின்றி சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மாலை நேர வகுப்பில் பங்கேற்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.