என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்வாயில் போதை ஆசாமி தவறி விழும் காட்சியை படத்தில் காணலாம்.
ஓசூரில் பரபரப்பு கழிவுநீர் கால்வாய்க்குள் போதையில் தள்ளாடி விழுந்த மதுப்பிரியர்
- திடீரென கால் தடுக்கி கழிவுநீர் கால்வாய்க்குள் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற விழுந்தார்.
- துரிதமாக செயல்பட்டு மீட்டதால் உயிர் தப்பினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் நேற்றுமாலை கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மதுபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் முதியவர் ஒருவர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் வீடியோ மூலம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கில் பகுதியில் நேற்று 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த வாகனத்தில் பின்னால் இருந்த முதியவர் ஒருவர் இறங்கி மதுபோதையில் சாலையில் தள்ளாடினார்.
எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்த அவர் மெதுவாக அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி கழிவுநீர் கால்வாய்க்குள் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற விழுந்தார்.
இதில் மழைவெள்ளம் அவரை கால்வாய்க்குள் அடித்து சென்றது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஓடி வந்து அவரை பிடித்து இழுக்க முயன்றனர். ஆனால் தண்ணீர் அடித்து செல்லப்பட்டது. இதனால் கால்வாய் மறுபுறம் வழியாக அவரை துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.
மதுபோதையில் இருந்த அவர் மயக்கம் அடைந்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் அவருக்கு போதை சற்று தெளிந்தது. கழிவுநீர் கால்வாயிக்குள் விழுந்த அவருக்கு தலை, முகம், கால் உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
பின்னர் சிகிச்சைக்காக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விசாரணையில் கால்வாய்க்குள் தவறி விழுந்தவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த கனகராஜ் (வயது 60) என்பது தெரியவந்தது.
மதுபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






