search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருசேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்- செங்கோட்டையன்
    X

    குருசேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்- செங்கோட்டையன்

    • திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும்.
    • திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம். எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டு காலம் தமிழகம் வியக்கத்தக்க வகையில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பல மாற்றங்களை துறைதோறும் உருவாக்கி சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார்.

    பழகுவதற்கு எளிமையானவர். பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை பொதுமக்கள், கழகத்தினர் போற்றும் அயராத உழைப்பினால் எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

    அவரது தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. அவரது தலைமையில் இன்று பணியை ஆற்றுகின்றோம்.

    அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு, அமைதியோடு செய்து வருகின்றோம். சரியான முறையில் கழகத்தின் சார்பாக எடப்பாடி தலைமையில் சரியான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் அந்த பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இரட்டை இலை சின்னம் வழக்கை பொறுத்தவரை நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5 சதவீத பேர் ஒரு மனதாக பொதுச்செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம். முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.

    4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது. தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்கி முடிய கால அவகாசம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகின்றோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி, தனித்து போட்டி குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் குறித்த கேள்விக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பதில் அளித்தார்.

    Next Story
    ×