search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் பாறையாக காட்சியளிக்கும் குற்றால அருவிகள்
    X

    தென்காசி மாவட்டத்தில் பாறையாக காட்சியளிக்கும் குற்றால அருவிகள்

    • குற்றால அருவிகள் போதிய மழை இல்லாமல் கோடை காலம் என்பதால் நீர்வரத்து இன்றி காட்சியளித்து வருகின்றது.
    • மெயின் அருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகள் அனைத்தும் போதிய நீரின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் தற்பொழுது மழைக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கியுள்ளதால் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்ந்துவரும் குற்றால அருவிகள் போதிய மழை இல்லாமல் கோடை காலம் என்பதால் நீர்வரத்து இன்றி காட்சியளித்து வருகின்றது. குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகள் அனைத்தும் போதிய நீரின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கோடை மழையானது சூறைக்காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழையாக வெளுத்து வாங்கிய நிலையிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யாததால் அருவிகள் அனைத்தும் நாளுக்கு நாள் வெறும் பாறைகளாக காட்சியளித்து வருகின்றன.

    குற்றால அருவிகளுக்கு குளிப்பதற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் அனைவரும் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால் கடைகளை திறக்காமல் மூடியே வைத்துள்ளனர்.

    எனவே தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை மழை பெய்ய தொடங்கினால் மட்டுமே குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.

    சுற்றுலா பயணிகளும் குற்றால அருவிகளை நாடிச் செல்வர். கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள் அனைவரும் அருவிகளில் எப்பொழுது நீர் கொட்டும், சுற்றுலா பயணிகளின் கூட்டம் வரும் நிலை ஏற்படுமா?என காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×