காதலி இறந்த சோகத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

அடிக்கடி சரவணன் தன் மீது சந்தேகப்படுவதால் கிருத்திகா மிகுந்த மன விரக்தி அடைந்துள்ளார்.கிருத்திகா விநாயகர் சதுர்த்தி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலி இறந்த சோகத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை
Published on

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரவணன் (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தாராபுரம் நாடார் தெருவை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவரது மகள் கிருத்திகா (வயது 18).

இவர் காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சரவணனும், கிருத்திகாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருத்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் நேற்று மாலை சரவணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் 2பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்த விவரங்கள் தெரிய வந்தது. சரவணன், கிருத்திகா 2 பேரும் உறவினர்கள். இருவரும் காதலித்து வந்த நிலையில், சரவணன் கோவையில் உள்ள கல்லூரியிலும், கிருத்திகா காங்கயத்தில் உள்ள கல்லூரியிலும் படித்து வந்துள்ளனர். அப்போது சரவணன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களுடன் பேச, பழக கூடாது என்று கிருத்திகாவுக்கு கண்டிசன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அடிக்கடி சரவணன் தன் மீது சந்தேகப்படுவதால் கிருத்திகா, மிகுந்த மன விரக்தி அடைந்துள்ளார். இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் காதலி பிரிந்த சோகத்தை தாங்க முடியாமல் வாழ்ந்து வந்த சரவணன், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருத்திகாவை போன்றே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலனும், காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாராபுரம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com