search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
    X

    இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

    • இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.
    • இலங்கையை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய குடும்பத்தினர் வாழ வழியின்றி தவித்தனர். இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.

    அவர்கள் அனைவரும் ராமேசுவரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

    இலங்கை வவுனியா தேக்கன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாந்த குமார் (வயது33). இவர் தனது மனைவி ரூப லட்சுமி(26), மகன் ஹேம் சரண்(7), மகள் யோசனா(4), மற்றொரு மகன் தருஷான்(2) ஆகியோருடன் நேற்று இரவு இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு பிளாஸ்டிக் படகு ஒன்றில் புறப்பட்டு வந்துள்ளார்.

    அவர்களை படகில் அழைத்து வந்த நபர், தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார். அவர்கள் அங்கு தவித்தபடி நின்றதை இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த வழியாக சென்ற மீனவர்கள் பார்த்தனர். அவர்கள் அதுகுறித்து ராமேசுவரம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அரிச்சல் முனை பகுதிக்கு சென்று அங்கு தவித்தபடி நின்ற சாந்தகுமார், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் 5 பேரும் மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தது குறித்து சாந்தகுமார் மற்றும் அவரது மனைவியிடம் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தினர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அங்கு வாழ வழியின்றி தவித்ததன் காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். மேலும் தங்களை படகில் அழைத்து வந்தவர்கள் ரூ.1லட்சம் வாங்கியதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, அங்கிருந்து ராமேசுவரம் தனுஷ் கோடிக்கு இதுவரை 237 பேர் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×