search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதியில்லை- அமைச்சர் சிவசங்கர்
    X

    தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதியில்லை- அமைச்சர் சிவசங்கர்

    • அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும்.
    • ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பண பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஓய்வு பெற்ற பணியாளர்கள் 353 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 518 பணியாளர்களுக்கு ரூ.145.58 கோடி மதிப்பிலான பணபலன்களை வழங்கினர்.

    இதனை தொடர்ந்து கோவை மாநகரில் இயங்கும் பஸ்களில் முதல்கட்டமாக 65 பஸ்களுக்கு புவிசார் நவீன தானியங்கி (ஜி.பி.எஸ்.) அறிவிப்பான் மூலம் பஸ் நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள், ஈரோடு மண்டலத்தில் 3 பணிமனைகள், திருப்பூர் மண்டலத்தில 1 பணிமனை என மொத்தம் 7 பணிமனைகளில் டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் தங்குவதற்கு குளிர்சாத வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அனைத்து டிரைவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி முடிந்த பின்னர் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் 2 ஆண்டுகளுக்கான எந்த பலன்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்டு சென்ற பணப்பலன்களை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அதற்கு என நிதி ஒதுக்கி, தற்போது பணப்பலன்கள் வழங்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராடாமலேயே இந்த நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

    கடந்த காலங்களில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அப்போது சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கபட்டு, குழப்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட சம்பள விகிதங்களை, தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பழையபடி, கலைஞர் வழங்கியபடி இப்போது 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கி வருகிறோம்.

    அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும். பிற மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. தனியார் துறையினர் சிலர் தங்கள் பஸ்களில் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுபற்றிய தகவல் வந்தவுடன், அதிகாரிகளை வைத்து உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    கடந்த 5 ஆண்டுகளில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிற பணிமனைகளிலும் பணி நியமனம் நடைபெறும்.

    தமிழக முதலமைச்சர் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கு மாநில அரசின் நிதியை ஒதுக்கி உள்ளார். இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. இதுதவிர ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,400 பஸ்கள் வாங்குவதற்கான பணியும் தொடங்கி உள்ளது. 6 மாத காலத்துக்குள் புதிய பஸ்கள் நடைமுறைக்கு வந்து விடும்.

    பைக் டாக்சி என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதனை வாடகைக்கு விடும் வாகனமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக அரசை பொறுத்தவரை பைக் டாக்சியை பயன்படுத்தக்கூடாது. பைக் டாக்சியை வாடகைக்கு விடுவதற்கு இதுவரை எந்தவிதியும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் பைக்டாக்சிக்கு அனுமதி கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×