search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • 36 அடி உயரம் 36டன் எடை கொண்ட தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.
    • அய்யா அர ஹர சிவ சிவ அய்யா உண்டு என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை இழுத்து சென்றனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டு தோறும் புரட்டாசி மாதம், 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவில், அய்யா, காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்தார். தினமும் திருஏடு வாசிக்கப்பட்டது.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை - உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் தேர். அலங்காரம் செய்தல் பணிவிடை நடை பெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி பதிவலம் வந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஏறினார். முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் நாதஸ்வரம், செண்டை, உருமி மேளம் முழங்கப்பட்டது. இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரம் 36டன் எடை கொண்ட தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.

    தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞான திரவியம் எம்.பி., நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம், நாடார் பேரவை சட்ட ஆலோசகர் எம். கண்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் பி.ஆதி குருசாமி மாநில இணைச்செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்த னர்.

    தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யா அர ஹர சிவ சிவ அய்யா உண்டு என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை இழுத்து சென்றனர்.

    பிற்பகல் 1 மணிக்கு அன்ன தானம், மாலை 6 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், இரவு10.30 மணிக்கு பட்டா பிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்ட நாமம், 1.45 மணிக்கு அய்யா பூம் பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்ட சோபனம், அண்டநாமம், திருநாமக்கொடி இறக்குதல், பள்ளியுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×