தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயர்கிறது

ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயா்த்தப்பட வேண்டும். மின் கட்டண உயா்வு தொடா்பாக தமிழக அரசும் முடிவெடுக்கவில்லை.
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயர்கிறது
Published on

சென்னை:

தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடா்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த நிறுவனங்களின் வருவாய், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடா்ந்து இழப்புகள் அதிகரித்து வருகின்றன.

தற்போதைய நிலவரப் படி ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின்வாரியம் செயல்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மின் கட்டணம் 30 சதவீதத் துக்கும் அதிகமாக உயா்த்தப்பட்டது. இது தொடா்பான ஆணையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயா்த்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஆணையின் படி இந்த ஆண்டு ஜூலை மாதம் மின்கட்டண உயா்வு அமலாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயா்த்த வேண்டும் என்று விதிகள் உள்ளன.

அதன்படி, நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 சதவீதம் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயா்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

'மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையொப்பம் இட்டிருப்பதால் 2027 வரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயா்த்தப்பட வேண்டும். வழக்கம்போல வாரியத்தின் வரவு, செலவு விவரங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம்.

இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. மின் கட்டண உயா்வு தொடா்பாக தமிழக அரசும் முடிவெடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com