search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடியில் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும்-சேவை சங்கங்கள் மனு

    • குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    • நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் சார்பில் நகர மன்ற தலைவர் மன்னை த.சோழராஜனிடம் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.எஸ். ராஜேந்திரன், தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் டாக்டர் எஸ்.சேதுராமன், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் வேல்முருகன், விலங்கியல் ஆர்வலர்கள் விவேக், அண்ணாதுரை, நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், ஜெயக்குமார், ஜான்சன் லயன்ஸ் சங்கம் சந்தோஷ், ஜே.சி.ஐ சங்கம் நந்தகுமார் உட்பட பலர் ஒருங்கிணைந்த கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மன்னார்குடி நகரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மனித நேயத்தோடு வரையறுக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறை களின்படி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மன்னார்குடி நகரத்தில் தற்சமயம் சுமார் 6000 தெரு நாய்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தத் தெரு நாய்கள் உணவுக்காக அலையும் நிலையில் உணவு கிடைக்காத சூழலில் வெறிபிடிக்க வாய்ப்பு உள்ளது.

    விரைவாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவில்லை யெனில், தெரு நாய்கள் அதிகரித்து உணவு கிடைக்காமலும், குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே, நமது மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிகின்ற அனைத்து தெரு நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதோடு, அதற்கான நவீன அறுவை சிகிச்சை கூடம், தெருநாயை பிடிப்பது முதல் அறுவை சிகிச்சை செய்து முடித்து பிடிபட்ட இடத்திலேயே விடுவது வரையிலான பணிகளை உறுதிப்படுத்த வேண்டும்.

    நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்ற கொண்ட நகர் மன்ற தலைவர் சோழராஜன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    Next Story
    ×