

ஊட்டி
ஊட்டியில் உள்ள அழகர்மலையை சேர்ந்தவர் ராமு. தலைக்குந்தா பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அஜர்வால்(வயது 9). எச்.பி.எப். பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் அஜர்வால் சம்பவத்தன்று பள்ளி முடிந்து ஏ.சி.எஸ். பகுதியில் உள்ள டியூசன் சென்டருக்கு மினி பஸ் மூலம் சென்றான். பின்னர் அங்குள்ள சாலையை கடக்க முயற்சி செய்தான். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென அஜர்வால் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த அவனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புதுமந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் எம்பாலாடாவை சேர்ந்த பஸ் டிரைவர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.