search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் கடந்த 2 மாதத்தில் காட்டுயானைகள் தாக்கி 6 பேர் சாவு
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் கடந்த 2 மாதத்தில் காட்டுயானைகள் தாக்கி 6 பேர் சாவு

    • கடந்த 2 மாதத்தில் இந்த 2 யானைகள் 6 பேரை கொன்றுள்ளன.
    • இரு மாநில வனத்துறையினரும் யானைகளின் நடமாட்டத்தை கண்கா ணித்து வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 ஆண் யானைகள் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி நகரையொட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தேவசமுத்திரம் ஏரியில் முகாமிட்டது. தொடர்ந்து, 7-ந் தேதி அதிகாலை செல்லாண்டி நகர் கிருஷ்ணகிரி நகர், லைன்கொள்ளை வழியாக சாமந்தமலைக்கு சென்றன.

    யானைகள் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளையும் உடைத்து சென்றன. அன்று சாமந்தமலை விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி பெருமாள் என்பவர் யானைகள் தாக்கியதில் உயிரிழந்தார்.

    தொடர்ந்து கீழ்பூங்குருத்தி அருகே மூலக்காடு பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினார்கள். அப்போது யானைகள் மகராஜகடை சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை நாசம் செய்து, நாரலப்பள்ளி வழியாக ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    நேற்று முன்தினம் இரவு ஆந்திர வனப்பகுதியை யொட்டியுள்ள மொட்டுலுசேனு, சிக்கநத்தம், மல்லனூர் கிராமங்களில் புகுந்த இரு யானைகளும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்தன.

    இவ்விரு யானைகளையும் ஆந்திர வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மல்லனூர், பைபாளம், குசூர் பகுதி மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை, 5.30 மணிக்கு பெங்களூருவுக்கு கூலி வேலைக்கு ரெயிலில் செல்வதற்காக மல்லனூர் ரெயில் நிலையம் அருகே சென்ற பருத்திகொல்லையை சேர்ந்த உஷா (வயது34) என்ற பெண்ணை யானைகள் தாக்கி கொன்றது.

    பின்னர் அதே பகுதி வழியாக வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற யானைகள், இயற்கை உபாதை கழிப்பதற்காக வந்த மல்லனூரை சேர்ந்த சிவலிங்கம் (65) என்பவரையும் தாக்கியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பலியான இருவர் குடும்பத்திற்கும் தலா, 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தமிழக எல்லையான பச்சூர், ஆந்திர எல்லையான மல்லனூர் அருகே சுற்றுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இரு மாநில வனத்துறையினரும் யானைகளின் நடமாட்டத்தை கண்கா ணித்து வருகிறார்கள்.

    கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே காட்டுகொல்லை கிராமத்திற்குள் வந்த இந்த 2 யானைகள் ராம்குமார் (27) என்பவரை தாக்கி கொன்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஏப்ரல்) 21-ந் தேதி தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரிகொட்டாய் இருளர் காலனியை சேர்ந்த காளியப்பன் (வயது 70) என்பவரை இந்த யானைகள் தாக்கி கொன்றன.

    தொடர்ந்து கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய மொரசுப்பட்டி யை சேர்ந்த வேடி (55) என்ற விவசாயியை இந்த யானைகள் தாக்கி கொன்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 7-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலையை சேர்ந்த விவசாயி பெருமாள் இந்த யானைகள் தாக்கியதில் பலியானார்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று ஆந்திர எல்லைக்கு சென்ற இந்த யானைகள் தாக்கி அந்த பகுதியை சேர்ந்த உஷா, சிவலிங்கம் ஆகிய 2 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2 மாதத்தில் 6 பேரை இந்த 2 யானைகளும் கொன்றுள்ளன.

    Next Story
    ×