

பொன்னேரி:
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் கம்பெனி டயர் கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு மீஞ்சூர் அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் பிரேசில் நாட்டுக்கு 1500 டயர் ஏற்றுமதி செய்ய கடந்த 2-ம் மாதம் 9-ந் தேதி அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் பிரேசில் நாட்டில் ஆர்டர் கொடுத்த கம்பெனி நிறுவனம் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் 1005 டயர்கள் மட்டும் இருப்பது தெரியவந்தது. மீதமுள்ள 495 டயர்கள் காணாமல் இருப்பது குறித்து பிரேசில் நாட்டு கம்பெனி ஒரகடத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு புகார் தெரிவித்தது.
அதன் அடிப்படையில் தனியார் டயர் கம்பெனி தலைமை அதிகாரி நாராயணன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டு மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல் விசாரணையில் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்றதாகவும் ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரியவந்துள்ளது. மேலும் கண்டெய்னர் கதவு சீல் உடைக்காமல் கதவின் போல்ட் மட்டும் கழற்றி 495 டயர்களை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு 8.29 லட்சம் ஆகும். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.