

புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது.
மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் முதல் மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
இதனால் கனரக வாகனங்கள் மற்றும் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகளின் இயக்கம் குறைக்கப்பட்டது.
காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது. மாசடைந்த காற்றை சுவாசித்த பொதுமக்களில் சிலருக்கு சுவாசப் பிரச்சனைகளும் எழுந்தது.
இதனால் டெல்லியில் காற்றின் தரத்தை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால், தலைநகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் கடந்த 55 நாட்களில் இல்லாத அளவிற்கு நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
குறிப்பாக மிகவும் அபாயகரம் என்ற நிலையில் இருந்த காற்றின் தரம், தற்போது மக்கள் சுவாசிக்கும் தரமான திருப்திகரம் என்ற அளவிற்கு முன்னேறியுள்ளது. இதனால் டெல்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.