

பேரையூர்:
ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 23-ந் தேதி மதுரை மாவட்ட எல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா முடிந்ததையொட்டி 26-ந் தேதி முதல் மலை ஏற தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் மலையில் இருந்தவர்களை வனத்துறையினர் கீழே இறக்கி விட்டனர்.
வனத்துறையினர் மலைப்பகுதிகளில் சோதனை செய்தபோது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் உயிருக்கு போராடிய நிலையில் மயங்கிக் கிடந்தார்.
உடனே அவரை மீட்ட வனத்துறையினர் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சாப்டூர் கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.