டாவின்சி வரைந்த இயேசு ஓவியம்: ரூ.2925 கோடிக்கு ஏலம் எடுத்த சவுதிஅரேபிய இளவரசர்

உலகப்புகழ் பெற்ற லியனார்டோ டாவின்சி வரைந்த இயேசு ஓவியத்தை சவுதி அரேபியாவின் இளவரசர்களில் ஒருவரான பாதர் பின் அப்துல்லா பின் முகமது பின் பர்காள் அல்- சவுத் வாங்கி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
Published on

லண்டன்:

மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் உலகப்புகழ் பெற்ற லியனார்டோ டாவின்சி. சமீபத்தில் இவர் சால்வேடர் முன்டி என்ற தலைப்பில் வரைந்த இயேசு ஓவியம் லண்டன் ஷோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது.

அந்த ஓவியம் ரூ.2,925 கோடிக்கு (450.3 மில்லியன் டாலர்) ஏலம் போனது. அதை விலைக்கு வாங்கியவர் யார்? என்ற விவரம் வெளியே தெரியாமல் இருந்தது.

மிக அதிக விலைக்கு ஏலம் போனதால் அதை வாங்கியவர் யார்? என்பதை அறிய உலக அளவில் ஆர்வம் எழுந்தது.

இந்த ஓவியத்தை சவுதி அரேபியாவின் இளவரசர்களில் ஒருவரான பாதர் பின் அப்துல்லா பின் முகமது பின் பர்காள் அல்- சவுத்வாங்கி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் ஆவணங்களுடன் அமெரிக்க பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

மேலும் இத்தகவலை ஷோத்பீ ஏல மையத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பொதுவாக பொருளை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் விரும்பும் பட்சத்தில் தான் அவர்கள் குறித்த தகவல் வெளியிடப்படும்.

ஆனால் இளவரசர் கடைசி நேரத்தில் தான் தன்னைப் பற்றிய ஆவணங்களை வெளியிட்டார் என்றார். தற்போது இந்த ஓவியம் அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லாவ்ரே அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இயேசு ஓவியத்தை மிக அதிக விலைக்கு முஸ்லிம் இளவரசர் வாங்கியிருப்பது சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com