

கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்டராக இருந்த பிரசாந்த் மாவட்டத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களுக்கு அதிகாரிகளுடன் அரசு பஸ்சில் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
சிக்கன நடவடிக்கையை கையாளுவதற்காக இந்த முறையை கடைபிடித்து வருவதாக கலெக்டர் பிரசாந்த் கூறினார். இந்த நிலையில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக தண்டபாணி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் முதன்முதலாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழத்திருகலிப்பாழை என்ற இடத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு கலெக்டர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கீழத்திருகலிப்பாழை கிராமத்துக்கு அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.
பின்னர் அவர்கள் கீழத்திருகலிப்பாழை கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கலெக்டருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கூட்டம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர்.
ஏற்கனவே கலெக்டராக இருந்த பிரசாந்த் கடைபிடித்த வழக்கத்தையே தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய கலெக்டர் தண்டபாணியும் பயன்படுத்தியதால் அவரை பொதுமக்கள் பாராட்டினர்.