கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை - 90 பேர் கைது

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை - 90 பேர் கைது
Published on

கோவை:

சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியல் நடைபெற்றது. அப்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி,

ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர் நாகராஜ், திராவிடர் விடுதலை கழகம் மாநகர தலைவர் நேருதாஸ், தமிழ் புலிகள் கட்சி பொதுச்செயலாளர் இளவேனில், சமூக நீதிக்கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

கோவை கலெக்டர் அலுவலகம் முன் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் அனைத்து தொலை தொடர்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. மக்கள் மீதான உச்ச நீதி மன்ற தீர்ப்பை திரும்ப பெற கோரியும், வட மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com