உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

அரியலூர்:

வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுனன் பரிசு வழங்கினார்.

பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பிச்சை பிள்ளை முன்னிலை வகித்தார். பின்னர் காற்று மாசுபடுதல் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதேபோல கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளியிலும் மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் ‘காற்று மாசுபாட்டை தவிர்ப்போம்‘ என்பதை வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியர் அருள்நம்பி தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனை லப்பைக்குடிக்காடு அரசு டாக்டர் அசோக்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com