

புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்வி ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பேருந்தின் சன்னல்களை கல்லால் அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பேருந்து தாக்கப்பட்டதால் எங்களின் பாதுகாப்பில் எவ்வித குறையும் ஏற்படாது. தற்போது ஜுனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக பல நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்தியாவில் உள்ளன. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டிற்கு வரும் வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நமது கடமையாகும்’ என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பேருந்து தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணி தாக்கப்பட்டது இந்த ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.