

அருணாசல பிரதேசத்தின் நம்சாய், சாங்லாங் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 6 பிரிவினருக்கு நிரந்தர குடியுரிமை (பிஆர்சி) சான்று வழங்க, உயர்மட்டக்குழு ஒன்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் இடாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போராட்டமும், வன்முறையும் பரவி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 60 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக அரசு உறுதி அளித்தபோதும் போராட்டம் நீடித்தது.
நேற்று நித்தி விகாரில் உள்ள துணை முதல்-மந்திரி சவ்னா மெயினின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவரின் அலுவலகம் சூறையாடப்பட்டது. முதல்வரின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். துப்பாக்கி சூடும்நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
காங்கிரசின் ஆதரவுடன் இந்த போராட்டம் நடந்திருக்கலாம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. #ArunachalPradesh #ResidencyCertificate