உரங்கள் வாங்க ஆதார் அட்டை அவசியம் - வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

விற்பனை முனையக் கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் ஆதார் அட்டையினை அவசியம் கொண்டு வந்து உரங்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரங்கள் வாங்க ஆதார் அட்டை அவசியம் - வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது சம்பா பருவ பணிகள் தொடங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை மண்வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் உரமிடுவதால் மண்வளத்தினை பாதுகாப்பதுடன், உர செலவும் குறைகிறது.

எனவே விவசாயிகள் மண்வள அட்டையின் பரிந்துரைப்படி பயிருக்கு உரமிட வேண்டும். தற்போது விற்பனை முனையக் கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையினை அவசியம் கொண்டு செல்வதுடன் தங்களின் கைரேகையினை பதிவு செய்து உரங்களை பெற வேண்டும். உரங்களை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது தவறாது ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகளை தவிர மற்றவர்களின் ஆதார் எண் மற்றும் கைரேகை பெற்றுக் விற்பனை முனைய கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் உர விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மொத்த உர விற்பனையாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்திடக் கூடாது. விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யும்போது அதிகபட்ச விற்பனை விலைக்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com