சோமாலியாவில் இந்திய தொழிலாளர்கள் 33 பேர் பிணைக்கைதியாக சிறைவைப்பு

சோமாலியாவில் பிணைக்கைதியாக உள்ள 33 தொழிலாளர்களும் விரைவில் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகாதீசுவில் உள்ள நிறுவனம் ஒன்றில் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 33 தொழிலாளர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன் வேலைக்காக சென்றனர். அவர்களுக்கு முதல் 2 மாதங்களும் சம்பளத்தை சரியாக கொடுத்த அந்த நிறுவனம், பின்னர் கடந்த 8 மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை.

இதை கேட்டதால், அவர்களது பாஸ்போர்ட்டுகளை பறித்து, நிறுவன வளாகத்திலேயே பிணைக்கைதிகளாக சிறைவைத்துள்ளது. மேலும் சம்பளம் கேட்டால் சுட்டுக்கொன்று விடுவோம் எனவும் மிரட்டி வருகிறது. இன்னும் கொடுமையாக, கடந்த 15 நாட்களாக அவர்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் போன்றவற்றையும் வழங்காமல் பட்டினி போட்டுள்ளது.

இது குறித்து, அந்த தொழிலாளர்களில் ஒருவர் உத்தரபிரதேசத்தில் உள்ள சமூக ஆர்வலர் ராஜேஷ் மணி என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கென்யாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கி உள்ளார்.

இதைத்தொடர்ந்து சோமாலிய அரசுடன் பேசி வரும் இந்திய தூதரக அதிகாரிகள் அந்த தொழிலாளர்களை உடனடியாக மீட்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு சோமாலிய அரசும் உடன்பட்டிருப்பதுடன், 33 தொழிலாளர்களும் விரைவில் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com