

விருதுநகர்:
திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) வியாபாரி. இவர் சாமியார் மடம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. அதில் இருந்து 5 பேர் இறங்கினர். அவர்கள் கத்தியை காட்டி சரவணனை மிரட்டினர்.
அந்த கும்பல் சரவணன் வைத்திருந்த ரூ. 25 ஆயிரத்தை பறிக்க முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பிக்க சரவணன் கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இதனை கவனித்த கும்பல் ரூ. 25 ஆயிரத்தை பறித்து கொண்டு காரில் ஏறி தப்பி ஓட முயன்றது. ஆனால் பொதுமக்கள் சுற்றிவளைத்ததால் 3 பேர் சிக்கிக் கொண்டனர். 2 பேர் மட்டும் காரில் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட 3 பேரையும் திருத்தங்கல் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரனையில் அவர்களது பெயர் சீமைச்சாமி (37) பாண்டியன் நகர், முனீஸ்வர் (25) இந்திராநகர், ராஜேசுவரன் சிலோன் காலனி என தெரியவந்தது. தப்பி ஓடிய 2 பேர் குறித்தும் கொள்ளை சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.