

திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் தனியாக செல்லும் நபர்களிடம் மர்ம ஆசாமிகள் மிரட்டி செல்போன்கள், பணத்தை பறித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் பத்ரிநாராயணன் நேரடி மேற்பார்வையில் மாநகர வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் தனிப்படை போலீசார் செல்போன் மற்றும் பணத்தை பறித்து செல்லும் நபர்களை கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு டாஸ்மாக் கடையின் அருகே சந்தேகத்திற் கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் சாமுண்டிபுரம் சேர்ந்த இளையராஜா (20) தென்காசி மாவட்டம் கீழப்புளியூர் பகுதியைச் சேர்ந்த தம்பிரான் (20) என்பது தெரியவந்தது.
இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து திருப்பூர் மாநகரில் பல பேரிடம் செல்போன், பணத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.