குஜராத்தில் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில அரசு

குஜராத்தில் அதானி தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை நடத்தும் ஜி.கே மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 111 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து விசாரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. #infantsdead #probeordered
குஜராத்தில் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில அரசு
Published on

காந்திநகர்:

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் அதானி தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை நடத்தி வரும் ஜி.கே அரசு மருத்துவமனையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மே 20-ம் தேதி வரை சுமார் 111 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் ராவ் கூறியதாவது:-

‘ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 21 சதவிகிதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் 18, 19 சதவிகிதங்களில் இருந்தது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 14 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் குழந்தைகள் இறப்பதற்கான முக்கிய காரணம், தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுதான். 250 கிலோ மீட்டர் பயணித்து கர்ப்பிணி பெண்களை தாமதமாக மருத்துவமனையில் அனுமதிப்பதால்தான் மரணம் நிகழ்கிறது. அதையடுத்து, கர்ப்ப காலங்களில் பெண்கள் சத்தான உணவு உண்ணாமல் இருப்பதால், போதிய சத்துக்கள் இல்லாமலும் குழந்தைகள் உயிரிழக்கின்றன. பிறக்கும் குழந்தைகளின் உயிரிழப்பை குறைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக வல்லுநர் குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகள் இறப்பதற்கான காரணங்கள் குறித்து இந்த குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என சுகாதாரத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். #infantsdead #probeordered

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com