ஆத்தூர் அருகே 11 சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

ஆத்தூர் அருகே 11 சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சந்தன மரங்கள்
சந்தன மரங்கள்
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். இங்கு 50-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ஒன்று இவரது விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது.

பின்னர் அங்கிருந்த 11 சந்தன மரங்களை வெட்டி அந்த கும்பல் கடத்தி சென்றது. நேற்று காலை இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மணிக்கு தகவல் கொடுத்தனர். உடனே தோட்டத்துக்கு சென்ற அவர் 11 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மணி ஆத்தூர் வனத்துறையினர் மற்றும் மல்லியகரை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஆத்தூர் ரேஞ்சர் அன்பழகன், மல்லியகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு மற்றும் போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com