எளிதான அழகு குறிப்புகள் சில...

உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு.தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது.
எளிதான அழகு குறிப்புகள் சில...
Published on

இந்த காலத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை பேசியல் செய்து கொள்கிறார்கள். பல ரசாயன பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அந்த பேசியலால் முகத்திற்கு மேலும் பாதிப்புகள் அதிகரிக்குமே தவிர எந்தவித நன்மையும் ஏற்படாது. இவ்வாறு செய்வதற்கு பதிலாக நாமே நம் வீட்டில் இயற்கையான முறையில் எப்படி பேசியல் செய்வது என்று இந்த அழகு குறிப்பு பகுதியில் பார்ப்போம்.

கரும்புள்ளிகள் நீங்க

5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பின் ஆவிப்பிடித்து ஈரமான துணியால் தேய்த்தால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும். இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தை கழுவி தேங்காய் பாலில் நனைத்த பருத்தி துணியால் துடைக்கவும், காலையில் நீரில் கழுவவும், இது கருப்பு புள்ளிகளை அகற்றும். தேங்காய் பால், தேன் மற்றும் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெயையும் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது சருமட்தை ஈரப்பதமாக்குகிறது.

வறண்ட சருமம் பளபளக்க...

உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு. 2 ஸ்பூன் எள்ளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பயத்தமாவு கலந்து முகத்தில் பூசிவர முகச்சுருக்கம் மறைந்துவிடும். முகக்கருமை நீங்க சர்க்கரை, கற்றாழை ஜெல், பால் சேர்த்து ஒன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழித்து ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

முகத்தில் உள்ள தழும்புகள் மறைய

தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவ சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com