

இந்தியாவின் சில சின்னஞ்சிறு நகரங்களில் அதிகபட்சமாக 80 சதவீதம் வரை தனிக்குடும்பங்கள் காணப்படுகிறது. தமிழக கிராமப்புறங்களிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை வேகமாக சிதைந்து வருவதாக இன்னொரு புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக 11 சதவீத கூட்டுக் குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன.
திருமணம் ஆனவுடன் தனித்துச் செல்ல விரும்பும் இயல்பான மனப்போக்கு, கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வது, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றால் தனிக்குடும்பங்கள் பெருகுகின்றன.
தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 8½ கோடியாக உயரும் பட்சத்தில் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அதுபோன்று தனிக்குடும்பங்கள் விகிதமும் இதே வேகத்தில் அதிகரித்து வீடுகள், மின்சாரம், குடிநீர் போன்றவற்றின் தேவையும் பல மடங்கு உயரலாம்.
வேக வேகமாக அதிகரிக்கும் தனிக் குடும்ப வாழ்க்கை முறையால் சொந்த, பந்தங்களின் நெருக்கமான துணையின்றி இறுக்கமான சூழலில் வாழும் போக்கிற்கு மக்கள் தள்ளப்படும் சோக நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இனி கிராமங்களில் வசிப்போரும் கூட எந்திரமய வாழ்க்கையை சந்திக்கும் அவலம் ஏற்படலாம்.
தனிக்குடும்ப வாழ்க்கை முறையே சிறந்தது என்ற சிந்தனையுடன் வாழும் அமெரிக்காவில் கூட கடந்த 40 ஆண்டுகளில் 2 சதவீத அளவிற்கு கூட்டுக்குடும்பங்கள் அதிகரித்து உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எதிர்காலத்தில் நமது நாட்டில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சாத்தியமா? என்ற கேள்விக் குறி எழுந்திருப்பது கவலையளிக்கும் விஷயமாகும்.